பொள்ளாச்சி மின் மயானத்தில் அதிக கட்டணம் வசூல், சேவைக் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி ரோட்டரி சங்க அறக்கட்டளை சார்பில், உடுமலை சாலையில் மரப்பேட்டை பகுதியில் மின்மயானம் செயல்படுகிறது. இங்கு, கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை எரியூட்ட ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, பொள்ளாச்சி மின்மயானத்தில் உடலை எரியூட்ட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம், ரோட்டரிசங்க அறக்கட்டளை சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பில், ‘பொள்ளாச்சியில் 10 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்குள் வேனில் சடலத்தை எடுத்து வந்து, ரோட்டரி மின்மயானத்தில் எரியூட்ட ரூ.2,750 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். வேறு எந்த கட்டணங்களும் கிடையாது. மின் மயானத்தில் அதிக கட்டணம் வசூல் அல்லது சேவை குறைபாடு இருப்பின், நகர்நல அதிகாரியை 98401 27827 என்ற எண்ணிலும், சுகாதார ஆய்வாளரை 94437 42949 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். உடலை எரியூட்ட முன்பதிவுக்கும், புகார் தெரிவிக்கவும் ரோட்டரி சங்கத்தை 93613 06795 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, பொள்ளாச்சி ரோட்டரி மின் மயானம் இன்று (மே 30) செயல்படாது, 31-ம்தேதி (நாளை) முதல் வழக்கம்போல செயல்படும்என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.