பொள்ளாச்சி அருகே நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த நல்லட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மருத்துவப்பரிசோதனையில், அங்கு பணிபுரியும் மருத்துவர், அவசர ஊர்தி ஓட்டுநர், அலுவலகப் பணியாளர் என 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மருத்துவமனை முழுவதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புதிதாக வரும் புறநோயாளிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மரத்தடியில் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. அந்த வளாகத்திலேயே கரோனா பரிசோதனையும் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.