சிறப்பு கவனம் செலுத்தியதால் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது சேலத்தில் முதல்வர் தகவல்

சிறப்பு கவனம் செலுத்தியதால் கரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வனவாசியில் அரசு விழா நடந்தது. விழாவில், ரூ.123.53 கோடி மதிப்பில் நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும்,ரூ.118.93 கோடி மதிப்பில் புதியதாக 44 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 6,832 பயனாளிகளுக்கு ரூ.46.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

கரோனா தொற்றால் பொருளாதார சரிவை நாடே சந்தித்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 8 சதவீதமாக உள்ளது. சுகாதாரத்துறை மீது சிறப்பு கவனம் செலுத்தி வந்ததாலேயே கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே தினமும் அதிமுக ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் குற்றம்சாட்டி அறிக்கை விட்டு வருகிறார்.

எதிர்கட்சிகளோ, மக்களோ கோரிக்கை வைக்காமல் அரசுப் பள்ளிமாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்று நான் சிந்தித்து, அதற்கு தீர்வு காணும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். இந்த ஒதுக்கீட்டின்படி சேலம் மாவட்டத்தில் 21 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில், 21-வது மாணவர் நீட் தேர்வில் 211 மதிப்பெண் வாங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நங்கவள்ளியில் சென்றாய பெருமாள் கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி குடும்பத்தினருடன் பங்கேற்றார். சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பழனிசாமி பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE