சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுகிறது. 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை என்பது உள்பட ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை அக்கட்சியின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்திலும் இதுகுறித்த அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளார். பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். எனவே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியின் மீது அவதூறு வழக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.