சேலம்: சேலத்தில் புதிய டிராஃபிக் பிளானிங் செல் பிரிவு திறப்பு விழா நேற்று நடந்தது. அதில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மூலம் புதிய பிரிவை திறக்க வைத்து மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கவுரவித்தார்
சேலத்தில் புதியதாக ‘டிராஃபிக் பிளானிங் செல்’ என்ற தனிப்பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இந்த பிரிவு மூலம் போலீஸார் சேலம் மாநகரம் முழுவதும் ரோந்து சென்று, எங்கு அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என கண்காணித்து, சாலை விபத்து நடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபட முடியும். மேலும், விபத்து அதிகளவு நடக்கும் பகுதியில் பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் கருத்து கேட்டு விபத்துகளை தடுக்க முயற்சி மேற்கொள்வார்கள்.
இது தவிர எந்தெந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என கண்காணித்து அந்த பகுதியில் வாகன நெரிசலை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும்.
இந்த புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்’ பிரிவு மூலம் விபத்துகள் தடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்’ பிரிவு நேற்று திறக்கப்பட்டது. இதை மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி திறப்பதாக இருந்தது. விழா நேரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கட்ராமன் என்பவரை கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து காவல் ஆணையர் விஜயகுமாரி கவுரவித்தார்.
பின்னர் அவர் பேசும் போது, ‘சேலம் மாநகரப் பகுதிகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் . சென்னை போலீஸார் போல பணியாற்றி, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செய்ய என்னென்ன நடவடிக்கை எடுப்பது என ஆய்வு செய்து, அதற்கான தீர்வை காண வேண்டும்,’ என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் கவுதம் கோயல், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் உதயகுமார், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீஸார் பங்கேற்றனர்.