மக்கள் கூடும் கோயில் விழாக்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் உயிரிழப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

லட்சக்கணக்கான மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களில், உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்காததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குறிப்பிட்டேன். அப்போது பதில் அளித்த திமுக அமைச்சர், இது துயரமான சம்பவம் என்றும், வரும் ஆண்டுகளில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வகையில், நல்லபடியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் என்றும் பெருமை பேசினார்.

ஆனால், கடந்த 5-ம் தேதியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில், முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் திட்டமிடாததாலும் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் இறந்ததாகவும், மற்றொரு இளைஞர் கோயில் மண்டப வாயிலின் அருகே கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணமாக, மதுரை சித்திரைதிருவிழாவில் பட்டாக் கத்தியுடன்இளைஞர்கள் நடனமாடிய காட்சிகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இதனால் பக்தர்கள் மிகவும் அச்சமடைந்தனர். அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்ததா எனத் தெரியவில்லை?

இவற்றைப் பார்க்கும்போது, தமிழகத்தில் உளவுத் துறை செயல்படுகிறதா என்ற கேள்வியுடன், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, மக்கள் கூடும் விழாக்களில் உரியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது காரணமாக பலதுயரச் சம்பவங்கள் நேரிட்டுள்ளன.

மதுரையில் நேரிட்ட துயரச் சம்பவம், தஞ்சை, தருமபுரி மாவட்டங்களில் தேர்த் திருவிழாவின்போது நேரிட்ட துயரச் சம்பவங்கள், நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரச் சம்பவம் என தொடர்ச்சியாக வேதனையளிக்கும் நிகழ்வுகள் நேரிடுகின்றன. இனியாவது, லட்சக்கணக்கில் மக்கள் கூடும் திருவிழாக்களின்போது, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

35 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்