சென்னை: கோயில்களின் ஆகமங்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவில், அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனாரை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோயில்கள் என்னென்ன ஆகமங்களைப் பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரண்டு உறுப்பினர்களை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவில், அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனார் என்பவரை நியமித்து பிப்ரவரி 8-ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "ஓய்வுபெற்ற நீதிபதியுடன் கலந்தாலோசித்து குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. சத்தியவேல் முருகனார் நியமனம் தொடர்பாக குழு தலைவரிடம் ஆலோசனை ஏதும் நடத்தப்படவில்லை. ஆகமத்தைப் பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகனார், ஆகமங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். எனவே, தகுதியில்லாத அவரை கோயில்களின் ஆகமங்களைக் கண்டறியும் குழுவில் நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அரசின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சத்தியவேல் முருகனார் நியமிக்கக் கூடாது எனக் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவர் ஆகம குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகமங்களுக்கு எதிராக அவர் பேசியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "கோயில் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவில் சத்தியவேல் முருகனாரை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் தமிழக அரசு, அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
14 mins ago
விளையாட்டு
21 mins ago
ஜோதிடம்
3 mins ago
ஜோதிடம்
50 mins ago
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
59 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago