சென்னை: மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி மூலம் அனைத்து மண்டல மேலாளர்கள், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
நாட்டின் அதிக தூரம் கொண்ட 2 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தற்போது வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வரப்படுகிறது.
அந்த வரிசையில், வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட உள்ளது. 100 கி.மீ. தூரத்துக்கும் குறைவாக உள்ள இரு நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இயக்கப்படும்.
பசுமை எரிசக்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கப்படும் ரயில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தயாரிக்கப்படும். நடப்பு 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியைவிட 7 மடங்கு அதிகம்.
நாடு முழுவதும் 1,000 ரயில் நிலையங்களில் தினசரி பொருட்களை வாங்கும் வகையில் பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகம், கேரளாவில் இவை அதிக அளவில் இடம்பெறும்.
நடப்பு நிதி ஆண்டில் 250 ரயில்களுக்கான பெட்டிகளும், அடுத்த நிதி ஆண்டில் 320 ரயில்களுக்கான பழைய பெட்டிகளும் நீக்கப்பட்டு, புது பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் பழைய ரயில் பெட்டிகள் அனைத்தும் புதிய பெட்டிகளாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கூறியதாவது: தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,057.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டைரயில் பாதை அமைக்க ரூ.1,321.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே கடந்த 2022-23ம் ஆண்டில் ரூ.8,100 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த 2021-22ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 45.6 சதவீதம் அதிகம்.
புதிய ரயில்பாதை அமைக்க ரூ.1,158 கோடி, அகலப்பாதை பணிக்கு ரூ.475.78 கோடி, இரட்டை பாதை பணிக்கு ரூ.1,564.88 கோடி, ரயில் பாதை புதுப்பித்தல், சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கோட்டத்திலும் 15 ரயில் நிலையங்கள் என மொத்தம் 90 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. வரும் ஜுன் மாதம் புதிய பாம்பன் ரயில் மேம்பாலம் திறக்கப்படும்.
சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இந்த சேவை தொடங்கப்படும்.
டிக்கெட் பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள பயிற்சி அளித்து வருகிறோம். சென்னை புறநகரில் இந்த ஆண்டு இரண்டு 12 பெட்டிகள் கொண்ட ரயில் சேவை இயக்கப்படும். அடுத்த ஆண்டு 12 ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு சிங் கூறினார்.
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டைரா, தெற்கு ரயில்வே பொதுமேலாளரின் செயலர் செந்தமிழ்செல்வன், சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
18 mins ago
வாழ்வியல்
24 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago