பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்: பேரவையில் இபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன.11) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய விருகம்பாக்கம் சம்பவம் குறித்து கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் இங்கே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றச்சாட்டைத் தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும். அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும். அதனால்தான் நான் சொன்னேன். நான் ஓடி, ஒளிய மாட்டேன், பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று சொன்னேன்.

31-12-2022 அன்று இரவு 10-45 மணிக்கு பெண் காவலர் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடனே எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 353, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4-ன் கீழும் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சிகளை காவல் ஆய்வாளர் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரவின்குமார், ஏகாம்பரம் ஆகியோர் 3-1-2023 இரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் 4-1-2023 அன்று காலையே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். புகார் கொடுத்த அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி, 72 மணி நேரத்தில் அவர்களைக் கைது செய்ததுபோல், எந்த வழக்கிலாவது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா என்ற அந்தக் கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்.

எஸ்.பி. அந்தஸ்த்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரை, இதுமாதிரி புகாரில் அலைக்கழித்த ஆட்சிதானே அதிமுக ஆட்சி. இந்த அரசைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், ஒட்டுமொத்தமாக, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறதென்று சொன்னார்.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் இல்லை, அதிமுக ஆட்சியில்தான். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக் கூடிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிய, அவருடைய குற்றச்சாட்டுக்கு இதையே பதிலாகச் சொல்லி நான் அமைகிறேன்" என்று முதல்வர் பேசினார்.

அன்று நடந்தது என்ன? - முன்னதாக, சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கடந்த 31-ம் தேதி இரவு திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ பிரபாகர ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, 22 வயது பெண் காவலரிடம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சாலிகிராமம் மதியழகன் நகர் எஸ்.பிரவீன் (23), விருகம்பாக்கம் சின்மயா நகர் சி.ஏகாம்பரம் (24) ஆகியோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் கதறி அழுதார். அங்கிருந்த சக காவலர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர். அங்கு வந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர், பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் போலீஸாரை தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேடையில் இருந்து இறங்கி வந்த எம்எல்ஏ பிரபாகர ராஜா, பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், காவல் துறை மற்றும் தமிழக அரசுக்கும் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, கோயம்பேடு காவல் துணை ஆணையர் குமார் முன்னிலையில், பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், இதற்காக பெண் காவலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தனர். பெண் காவலரும் தனது புகார் மீது மேல்நடவடிக்கை தேவையில்லை என்று எழுதிக் கொடுத்ததாகவும், இரு தரப்பினரும் சமாதானமாகச் சென்றுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாரின் இந்த செயலுக்கு மீண்டும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். பின்னர், புகாருக்கு உள்ளான பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக அத்துமீறுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, இரவோடு இரவாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் வடக்குப் பகுதி, 129-வது வட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரவின் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்