சென்னை: "முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் தினம் 2022-ஐ முன்னிட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோமீட்டர் கருவிகளை வழங்கி, நீரிழிவு நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.14) வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: "இந்தியாவில் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் 10-12 சதவீதமாகவும், தமிழகத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது. தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினால் நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இன்று வரை கண்டறியப்பட்டவர்கள் 26,40,727 பேர். நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் பாதிப்புள்ளவர்கள் 19,26,136 பேர். ஆக மொத்தம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறிப்பட்டவர்கள் 45,66,863 பேர். தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 72 சதவீதம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டுகளாக முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி செய்து முடிப்பதற்காக 3 மருத்துவர்களுக்கு அயற்பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காயவியல் (3 Volumes), மருத்துவ தொழில்நுட்பவியல், குழந்தைகள் நல மருத்துவம், மயக்கியல், குழந்தைப் பருவ ரத்த நோய்கள் மற்றும் புற்றுநோய்கள், இயன்முறை மருத்துவம் மற்றும் நோய் தீர்க்கும் உணவு மருத்துவம் ஆகிய 7 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் 17 வயதுடைய பிரியா என்ற பெண் வலது கால்மூட்டு காயமுற்று ஜவ்வு சேதமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூட்டு உள்நோக்கி கருவியின் மூலம் சவ்வு சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்காக, இரத்த சேதத்தை தடுப்பதற்காக சுருக்குகட்டு (Compression Bandage) போடப்பட்டது. அந்த சுருக்குகட்டினால் அந்த பெண்ணிற்கு கால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, உயிர்காக்கும் விதமாக அந்த காலை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சிகிச்சையில் மாணவியின் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில், கவனக்குறைவினால் ஏற்பட்ட இழப்பிற்காக மிகவும் வருந்துகிறோம். இந்த கவனக்குறைவிற்காக அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையை சார்ந்த அம்மருத்துவர்கள் மீது உடனடி பணியிடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மாணவியின் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று அந்த மாணவிக்கு நவீன பேட்டரி கால்கள் பொறுத்தும் பணி மிக விரைவில் நடைபெறவுள்ளது மற்றும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அந்த மாணவி B.Sc., உடற்கல்வியில் படிப்பை முடித்த பிறகு உரிய அரசு வேலை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு.சாந்திமலர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஆயிஷா ஷாகின், நிலைய மருத்துவ அலுவலர் மரு.வாணி, நீரிழிவு நோய் துறைத் தலைவர் மரு.அ.சண்முகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
17 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
உலகம்
24 mins ago
வணிகம்
40 mins ago
வாழ்வியல்
36 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
ஆன்மிகம்
54 mins ago
விளையாட்டு
59 mins ago