சுவாதி கொலை வழக்கு | ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அதே ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சிறையில் மின் வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து, விசாரித்தார்.

சிறைத் துறை அதிகாரிகள், ராம்குமாரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடம், மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

விசாரணை முடிவில் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்துப் பார்க்கும்போது, ராம்குமார் உன்மையிலேயே மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டாரா, வேறு யாரேனும் அவரது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சினார்களா அல்லது எய்ம்ஸ் மருத்துவர் சுதிர்குப்தா அளித்த அறிக்கைபடி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மின்சாரம் பாய்ந்து ராம்குமார் இறந்ததாக டாக்டர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். அதேநேரம், அவராகவே மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்தாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய, சுதந்திரமான விசாரணை மிகவும் அவசியமா கிறது. உண்மையிலேயே ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ராம்குமாரின் தந்தை பரமசிவன் குற்றம்சாட்டுவது போன்று கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக, சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ராம்குமாரின் தந்தை பரமசிவத்துக்கு, தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். புழல் சிறையில் கைதிகளைக் கண்காணிக்க, குறைவான எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ராம்குமார் மரணத்துக்கு சிறைக் காவலர்களை மட்டுமே குறை கூற முடியாது. தமிழக அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது.

சிறையில் போதிய அளவில் அலுவலர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யப் போதுமான அளவுக்கு அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

24 mins ago

வாழ்வியல்

15 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்