தமிழகம்

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும்: தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

செய்திப்பிரிவு

காரைக்கால்: புதுச்சேரியில் புதியக் கல்விக்கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆய்வுப் பணிகளுக்காக காரைக்கால் வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூலம் காரைக்காலில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். காரைக்காலில் விமான நிலையம் அமைக்க முடியுமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மட்டுமின்றி காரைக்காலிலும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் அமல்படுத்தப்படும். புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும்.

புதிய கல்விக் கொள்கையில் இந்தியை, குலக்கல்வியை திணிப்பதாக கூறப்படுவது தவறானது. எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டாம். புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டால், வட இந்தியர்களின் ஆதிக்கம் வந்துவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளது தவறான கருத்து. புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களிலும், ஒவ்வொரு பிராந்தியத்தின் அருகில் உள்ள மாநிலத்திலும் மாநிலக் கல்வித்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. தனி கல்வி வாரியம் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த புதுச்சேரியிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு வரும்போது, அது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மேலும் பயனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT