இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும்: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர், மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்புமாறு கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் பங்கேற்று, "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நாளிதழ் கொண்டுவர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்த பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, “ராகுல் காந்தி குடும்பத்தினரைப் போன்று, நாட்டுக்காக யாரும் தியாகம் செய்யவில்லை. நாட்டு நலனுக்காக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர்தான் தேசியத் தலைவராக வேண்டும்” என்றார்.

முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசு பேசும்போது, “பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான். மோடிக்கு சிம்ம சொப்பனமாக ராகுல்காந்தி திகழ்கிறார். அதனால் இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்திதான் வர வேண்டும்” என்றார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசும்போது, “தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யார் என ஆராய்ந்தால் பாஜகவினரும், இந்து முன்னணியினருமாக உள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ரவுடிகளை கட்சியில் சேர்த்து வருகிறார். அதனால் நாட்டில் பாஜகவை ஒழிக்க சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

கே.வீ.தங்கபாலு பேசும்போது, “ராகுல் காந்தி நடைபயணத்தால் காங்கிரஸ் பேரெழுச்சி பெற்று வருகிறது. அவர்தான் இந்திய தேசிய காங்கிரஸுக்கு தலைமையேற்க வேண்டும்” என்றார். பின்னர் பேசிய கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, “நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்தியை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவரது பாதை தெளிவானது. தொலைநோக்குப் பார்வை கொண்டது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்றார். அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்படும்” என்று தீர்மானத்தை ஜெயக்குமார் எம்பி, முன்மொழிந்தார். அத்தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய், உதவி தேர்தல் அதிகாரி அஞ்சலி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வல்ல பிரசாத், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் 652 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்ந்த 321 நிர்வாகிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

ஓடிடி களம்

24 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

57 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்