தமிழகம்

கன்னியாகுமரி தேநீர்விடுதி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்: தமிழக முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேநீர் விடுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவரின் தேநீர் விடுதியில் இன்று (ஜூலை 17) காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

இந்த தீவிபத்தில் தேநீர்விடுதியில் வேலைபார்த்து வந்த மூசா (48) பிரவின் (25) சேகர் (52) மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன் (66) சுதா (43) சந்திரன் (62) சுசீலா (50) மற்றும் ஒருவர் உட்பட 8 நபர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியினை கேட்டு வருத்தமுற்றேன்.

தீக்காயமடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

இத்தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT