அரியலூரில் சடலங்களை தகனம் செய்ய முன்வராததால் வீணாகி வரும் நவீன எரிவாயு தகன மேடை

By பெ.பாரதி

அரியலூரில் சடலங்களை தகனம் செய்ய பெரும்பாலான பொதுமக்கள் முன்வராததால், ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வீணாகி வருகிறது.

அரியலூர் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. இங்கு 40,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகின்றன.

அதேபோல, பெரம்பலூர் சாலையில் ரயில்வே கேட் அருகே ஒரு சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடுகளில் விறகுகளைக் கொண்டு சடலங்கள் எரியூட்டப்பட்டதால், அதிகப்படியான செலவு ஏற்பட்டதுடன், சுற்றுச்சூழலும் மாசடைந்து வந்தது.

இதையடுத்து, பெரம்பலூர் சாலையில் உள்ள சுடுகாட்டில் நகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை கட்டப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு, கரோனா பரவல் காலக்கட்டத்தில் இறந்தவர்களின் உடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டன.

பின்னர், கரோனா பரவல் குறைந்ததையடுத்து, அரசின் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது அரியலூர் நகரில் இறப்பவர்களின் உடல்கள் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

சந்தனமாதா தெரு, பூக்காரத் தெரு, பென்னிஹவுஸ் தெரு, காளியம்மன் கோயில் தெரு, எத்திராஜ் நகர், மணியான்குட்டை போன்ற பகுதிகளில் இறப்பவர்களின் உடல்கள் மட்டும் எரிவாயு தகன மேடையில் எரியூட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாதத்துக்கு 3 என்ற அளவிலேயே சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. இதனால், எரிவாயு தகன மேடை எப்போதும் பூட்டியே கிடக்கிறது.

அரியலூரில் உள்ள சிமென்ட்சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடையில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய 3 பணியாளர்கள் மாத ஊதியத்துக்கு நியமிக்கப்பட்டனர்.

ஆனால், மாத ஊதியம் வழங்கமுடியாமல், சடலம் எரியூட்ட வரும்போது மட்டும் அந்த நாளுக்குரிய ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், இவர்கள் மற்ற நாட்களில் வேறு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர்.

சுடுகாட்டில் திறந்தவெளியில் விறகுகளைக் கொண்டு இறந்தவர்களின் உடல் எரிக்கப்படுவதால் காற்று மாசுபடுவதுடன், அதிகளவு செலவும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த நவீன எரிவாயு தகன மேடை வீணாகி வருகிறது.

சுடுகாட்டில் தகனம் செய்ய கூடுதல் செலவாகும் நிலையில், எரிவாயு மேடையில் தகனம்செய்ய ரூ.4,100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

எனவே, மக்கள் இந்த நவீன எரிவாயு தகன மேடையை பயன்படுத்த முன்வர வேண்டும் என்பது அரியலூர் நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளாக உள்ளது.

இதுதொடர்பாக, கல்லங்குறிச்சி சாலை பகுதி பொதுமக்கள் கூறும்போது, “காலம் காலமான வழக்கத்தை மாற்றிக் கொண்டு, இறந்தவர்களின் சடலங்களை வேறுவழியில் தகனம் செய்வதற்கு மனம் வரவில்லை” என்கின்றனர்.

செலவு குறைவு, காற்று மாசுபடுதல் தவிர்ப்பு, விரைந்து எரியூட்டப்படுவது என பல்வேறு சாதகமான காரணங்கள் இருப்பதால், இறந்தவர்களின் உடல்களை நவீன எரிவாயு தகனமேடையில் எரியூட்ட பொதுமக்கள் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE