சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதையடுத்து, 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்நடந்ததால், முந்தைய அதிமுக அரசின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த நிலையில், கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆக.13-ம் தேதி தாக்கல் செய்தார்.
‘காகிதம் இல்லா சட்டப்பேரவை’ என்ற திட்டத்தின்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக காகிதவடிவில் இல்லாமல் மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) தாக்கல்செய்தார். இதற்கான வசதிகள் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கில் செய்யப்பட்டிருந்தன.
முதல்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை ஆக.14-ம் தேதி துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது, புதிய அரசின் திருத்திய பட்ஜெட் என்பதால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களில் சிலவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கும் அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் பெரும்பான்மையான திட்டங்களுக்கு அரசாணை வெளியிட்டு, திட்டங்களின் செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. அரசுக்கான வருவாயை அதிகரிக்கும் நோக்கில், டாஸ்மாக் மதுபானங்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மணல் விற்பனையில் நேரடியாக அரசேஈடுபடும் வகையில் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக அரசின்2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். கரோனா பரவல் குறைந்துள்ளதால், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கிலேயே பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இம்முறையும் மின்னணு வடிவில் இ-பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டை பொருத்தவரை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மேலும் பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், அறிவிப்புகள் இடம்பெறும் எனதெரிகிறது. குறிப்பாக, தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை ஆகியவை முக்கிய அறிவிப்புகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்த அறிவிப்பு இடம்பெறும் என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், இன்று பிற்பகல் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இதில் அறிவிக்கப்படும்.
முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தாக்கலின்போது, நீட்தேர்வு, அதிமுகவினர் மீதான கைது, சோதனை நடவடிக்கைகள் குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதத்தை கிளப்ப வாய்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 mins ago
விளையாட்டு
26 mins ago
வேலை வாய்ப்பு
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago