சென்னை: சென்னை தரமணியில், "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. 5,000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில், DLF நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.
இந்த DLF டௌன்டவுன் வளாகம், பணியாளர்களுக்கென நலவாழ்வு மையம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்டஅரங்குகள், பிரத்யேக உணவுகூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. இவ்வளாகக் கட்டடம் பாரம்பரியமாகவும், அலுவலகங்களிலிருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான, சிறப்பான மாற்று அமைவிடங்களையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது. மேலும், இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும், சமூகக் கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது.
மேற்சொன்ன இத்தனித்துவமான வளாகத்தில் 1 மில்லியன் சதுரஅடி பரப்பளவுள்ள கட்டடத்தில், ஏறக்குறைய 7.7 லட்சம் சதுரஅடி பரப்பு அமைவிடத்திற்கு, டிட்கோ DLF கூட்டுமுயற்சி நிறுவனம், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் உடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.செயல்படுத்தப்பட்டுவரும் இந்த டௌன்டவுன் திட்டமானது, சுமார் 70,000-க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும். இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல்திட்டங்கள், ஒரு டிரில்லியன் SGDP (மாநில அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்ற இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு வாய்ப்புகளை வழங்கும்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மவுலானா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கிருஷ்ணன், டிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், டிட்கோ செயல் இயக்குநர் வந்தனா கர்க், DLF ரெண்டல் பிசினஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் கத்தார், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சதீஷ் கோபி, DLF உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
4 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago