சாத்தூர் செல்லாயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பர்வீன்(25). தொலைதூரக் கல்வியில் பி.காம். படித்து வருகிறார். இவர் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வாகன காப்பகத்தில் பணிபுரிகிறார்.
டீ கடையில் மாஸ்டராக பணியாற்றிய இவரது தந்தை மைதீன், தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். பர்வீனுக்கு 2 அண்ணன்கள், ஒரு அக்காள், 2 தம்பிகள், 3 தங்கைகள் உள்ளனர்.
சாத்தூர் நகராட்சி 21-வது வார்டில் பாஜக வேட்பாளராக பர்வீன் போட்டியிடுகிறார். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள இவர் கூறியதாவது:
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் பாஜக மகளிர் அணியில் இணைந் தேன். முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தது பாஜக அரசு. அதனால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தேன். சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
அதை மத்திய பாஜக அரசு செய்யும் என்ற நம்பிக்கையில் இக்கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். எனக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பே இறுதியானது. இவ்வாறு அவர் கூறினார்.