சென்னை மாநகராட்சி தேர்தல் | பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஜனவரி 17-ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'சென்னை மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 72 ஆயிரத்து 103 என்றும், இதில் 70 சதவீதமான 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் சென்னையின் மையப்பகுதியில் வசிப்பதாகவும், 20 லட்சத்து 25 ஆயிரத்து 371 பேர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் வார்டு பிரிக்கும் போது நகரின் மையப் பகுதியில் வார்டுகள் சிறியதாகவும், பிற பகுதிகளில் பெரியதாகவும் இருக்கும் எனவும், அந்தப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை சமமான அளவில் மேற்கொள்வதில் சிக்கல்' எழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின் எப்படி தலையிட முடியும்'' எனவும், ''அரசியல் சாசன தடை உள்ள நிலையில் வார்டு வரையறையில் எப்படி தலையிட முடியும் எனவும் கேள்வி எழுப்பி, மனுதாரர் தரப்பு விளக்கமளிக்க வேண்டும்'' எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் வாதங்களை முன் வைத்தார். சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர், ''வார்டு மறுவரையறை செய்து 2018ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும், தேர்தல் அறிவிப்புக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளது, முன்பே வழக்கு தொடர்ந்திந்தால், மீண்டும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்