கரோனா மூன்றாவது அலை | வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனா மூன்றாவது அலை வேகமாகப் பரவுவதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியா முழுவதும் 2022 ஜனவரி 8ஆம் தேதி நிலவரப்படி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 என்ற அளவிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327 என்ற அளவிலும் இருக்கின்ற நிலையினைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில விலக்குகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

மத்தியப் பணியாளர் நலத்துறை அமைச்சர் , கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய அரசுப் பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், இந்த விலக்கு 2022 , ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும், என்றும், வீட்டிலிருந்தே பணிபுரிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், துணைச் செயலாளருக்கு கீழுள்ள பதவிகளை வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள பணியாளர்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டுமென்றும், மீதமுள்ளவர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றலாம் என்றும், வீடுகளிலிருந்து பணியாற்றக்கூடியவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டுமென்றும், அலுவலகக் கூட்டங்கள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலம் நடைபெற வேண்டும் என்றும், பார்வையாளர்கள் சந்திப்பைப் பொறுத்தவரையில், அவசியமற்ற சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும், பணியிடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டுமென்றும், இவை அனைத்தும் 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2022 ஜனவரி 8ஆம் தேதியன்று கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,978 ஆகவும், அதாவது கிட்டத்தட்ட எட்டு விழுக்காடும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகவும் இருந்த நிலையில், ஜனவரி 9ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,895 ஆகவும், அதாவது 8.7 விழுக்காடாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு கூடுதலாக இரண்டாயிரம் பேர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வார காலமாக அரசு ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனேயே அலுவலங்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

கரோனா மூன்றாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற , சூழ்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நலம் பாதுகாக்கப்படுவதோடு, அரசு ஊழியர்களை கரோனா தொற்று பாதிப்பது கணிசமாகத் தடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே, தமிழ்நாடு முதல்வர் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும்'' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

உலகம்

40 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்