திருப்பத்தூர், ஆம்பூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் திறப்பு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் எ.வ.வேலு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீண்டும் இயக்குவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வெளியாகும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், மாதனூர் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் மின்னூர் மற்றும் சின்னபள்ளிகுப்பம் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியும், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யபாண்டியன் தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு 949 இலங்கை தமிழர்களுக்கு ரூ.10.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

‘‘இலங்கை அகதிகள் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று மாற்றியவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தான் முதன் முதலில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் அடுத்த மின்னூர் முகாமை சேர்ந்த 76 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. தொடர்ந்து சின்னபள்ளிகுப்பம் முகாமை சேர்ந்த 240 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பிலிருந்தும், பொதுமக்கள், தொழிலாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கும், தொழில்துறை அமைச்சருக்கும் தெரிவித்துள்ளேன். இரண்டு சர்க்கரை ஆலைகளையும் மீண்டும் இயக்குவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வெளியாகும்’’. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

20 mins ago

கல்வி

40 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்