புதுச்சேரியில் புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் ஏற்படவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (செப். 30)வெளியிட்ட தகவலில்: ”புதுச்சேரி மாநிலத்தில் 5,169 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-28, காரைக்கால்- 24, ஏனாம்-2, மாஹே- 5 பேர் என மொத்தம் 59 பேருக்கு (1.14 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 123 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 707 பேரும் என 830 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,840 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 697 (97.89 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 3 ஆயிரத்து 13 பேருக்கு (முதல் டோஸ்-6 லட்சத்து 91 ஆயிரத்து 872, இரண்டாவது டோஸ்-3 லட்சத்து 11 ஆயிரத்து 141) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.