கே.சி.வீரமணி மீதான வழக்கு; இரு இடங்களில் சோதனை: அதிமுக மாவட்டச் செயலாளருக்கு நெருக்கடி

By வ.செந்தில்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கின் தொடர்ச்சியாக, வேலூர் ஆவின் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக 564 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 15-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, கடந்த 16-ம் தேதி கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள் என 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில், கணக்கில் வராத சுமார் 5 கிலோ தங்க நகைகள், வைர நகைகள், அமெரிக்க டாலர் நோட்டுகள், 551 யூனிட் மணல் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், கே.சி.வீரமணியின் வங்கிக் கணக்குகள், லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், தொழில் முதலீடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.சி.வீரமணி தொடர்பான பல ஆவணங்கள் அவரது நெருங்கிய அரசியல் கூட்டாளியும், வேலூர் ஆவின் தலைவரும், வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வேலழகனிடம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆவணங்கள் வேலழகனின் ஆவின் அலுவலகம் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான சம்பத்குமார் வீட்டில் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் இன்று (செப். 24) சோதனை நடத்தினர்.

வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்திய ஆவின் அலுவலகம்.

அதேபோல், வேலூர் சாயிநாதபுரம் லட்சுமண முதலி தெருவைச் சேர்ந்த சம்பத்குமார் வீட்டில், ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவலர்கள் சோதனை நடத்தினர். சம்பத்குமார் வேலூர் ஆவின் இனிப்பு விற்பனைக்கான முக்கிய ஒப்பந்ததாரராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த திடீர் சோதனையால் வேலழகன் தரப்புக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கெனவே, வீரமணி மற்றும் அவரது சகாக்கள் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்றபோது வேலழகன் வீட்டில் சோதனை நடைபெறாதது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது சிறிய இடைவெளியில் இரண்டாம் கட்டமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வழக்கு தொடர்பாகவே வேலூரில் இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், இவர்களது தொடர்புகள் குறித்த சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கே.சி.வீரமணியின் தொழில் முதலீடுகள் குறித்தும் தொழிலதிபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்