வீடு தேடி கரோனா தடுப்பூசி: மதுரை மாநகராட்சி அறிமுகம்  

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

100 சதவீத இலக்கை எட்டுவதற்கு மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறைப் பணியாளர்கள், வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியுள்ளனர். மாநகராட்சியின் இந்த முன்மாதிரி முயற்சி பொதுமக்கள், மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 11 லட்சத்து 19 ஆயிரத்து 235 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மாநகராட்சியில் சுமார் 15 லட்சம் மக்கள் வசிப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே கரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் மாநகராட்சி, 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்ட அரசு ராஜாஜி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குக் கூடுதல் தடுப்பூசிகளைச் சுகாதாரத் துறையிடம் கேட்டுப்பெற்று வழங்குகிறது. மேலும், 100 பேருக்கு மேல் தடுப்பூசி தேவைப்படும் குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் முகாம் போட்டுத் தடுப்பூசி போடுகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் மண்டலத்திற்கு ஒரு வார்டைத் தேர்வு செய்து மொத்தம் 4 வார்டுகளில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் குழுவினர், அந்தந்த வார்டுகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கேபி.கார்த்திகேயன் கூறுகையில், ‘‘வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி போடுவதில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பரிசோதனை அடிப்படையில் 4 வார்டுகளில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட்டுள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைப்பைப் பொறுத்து விரைவில் அனைத்து வார்டுகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE