காஞ்சிபுரம் மாநகராட்சி 100 சதுர கி.மீ. பரப்பளவில் அமைய வாய்ப்பு: 7 கி.மீ. சுற்றளவில் உள்ள ஊராட்சிகளை இணைக்க திட்டம்

By செய்திப்பிரிவு

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள காஞ்சிபுரம் பெரு நகராட்சி 100 சதுர கி.மீ. பரப்பளவில் அமைய வாய்ப்பு உள்ளது. இதற்காக 7 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தற்போது பெரு நகராட்சியாக உள்ளது. இந்த நகராட்சி 36.14 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 2 லட்சத்து 34 ஆயிரத்து 353 பேர் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இது 3 லட்சமாக உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நகராட்சி மொத்தம் 51 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

சென்னையை ஒட்டி உள்ள மாவட்டத்தின் தலைநகரம் என்பதால் காஞ்சிபுரம் நகராட்சி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தொழில் சாலைகள் அதிகரித்திருப்பதால் வெளியூர்களில் இருந்தும் பலர் காஞ்சிபுரம் நகரில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு காஞ்சிபுரம் பெரு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள காஞ்சிபுரம் நகராட்சியின் அருகாமையில் 7 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்கள் இணைக்கப்பட உள்ளன. தற்போது 36.14 சதுர கி.மீட்டராக இருக்கும் காஞ்சிபுரம் நகராட்சி, மாநகராட்சியாக மாறும்போது இதன் பரப்பு 100 சதுர கி.மீட்டராக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியாக மாறும்போது கோனேரிக்குப்பம், திருப்பருத்திக்குன்றம், கருப்படிதட்டடை, கீழ்கதிர்பூர், திம்ம சமுத்திரம், களியனூர், ஏனாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்கள் இந்த மாநகராட்சியுடன் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சியாக மாறுவதால் மத்திய அரசின் திட்டமான அம்ருத், ஸ்மார்ட் சிட்டி ஆகிய திட்டங்களின் நிதி காஞ்சிபுரம் மாநாகராட்சிக்கு கிடைக்கும். வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.வி.குப்பன் கூறும்போது, "காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. சுற்றுலா நகரமான காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த நகரமாக உள்ளது. மாநகராட்சியாக அறிவித்தது மட்டும் அல்லாமல் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என்றார்.

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் லட்சுமி கூறும்போது, "சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு எங்களுக்கு வரும். அதன் பிறகு எந்தப் பகுதிகளை காஞ்சிபுரத்துடன் இணைப்பது என்பது தொடர்பாக முடிவு செய்து கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்