பிளஸ்2 சாதனை மாணவர்களுக்கு ‘தி இந்து’ சார்பில் விருது: சென்னையில் இன்று மாலை விழா

பிளஸ்2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ சார்பில் விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா சென்னையில் இன்று மாலை நடக்கிறது.

சமீபத்தில் நடந்துமுடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

தருமபுரி வித்யா மந்திர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு 1,192 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2-ம் இடம் பெற்றார். நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நித்யா ஆகிய இருவரும் 1,191 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 3-ம் இடத்தைப் பிடித்தனர்.

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த இந்த 4 மாணவ, மாணவிகளுக்கும் ‘தி இந்து’ சார்பில் விருது வழங்கப்படுகிறது. எக்ஸ்டெல் அகாடமி, டாக்டர் காமாட்சி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை விருதுக்கு ஸ்பான்சர் செய்துள்ளன. சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரமடா ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE