சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த சென்னை கடற்கரை-வேலூர் கண்டோன்மென்ட் மின்சார ரயில் தற்போது விரைவு ரயிலாக இயக்கப்படுவதால், கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி ஃபாஸ்ட் லோக்கல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.
வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஃபாஸ்ட் லோக்கல் ரயிலாக இயக்கப்பட்டு வந்த ரயிலில் சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த ரயில் சேவை இம்மாதம் 2-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரயில் சேவை ஃபாஸ்ட் லோக்கல் சேவைக்குப் பதிலாக, விரைவு (எக்ஸ்பிரஸ்) சேவையாக இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, "சென்னைக் கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு சாதாரண கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இருமடங்காக ரூ.40 வசூலிக்கப்படுகிறது. அதேபோல், கடற்கரையிலிருந்து திருவள்ளூர் செல்லரூ.10 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே, கரோனா ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண கட்டணத்தில் இயக்கி வந்த ரயிலை, விரைவு ரயிலாக மாற்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரும் சுமையாக உள்ளது. எனவே, இந்த ரயிலை முன்புபோல் சாதாரண கட்டணத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
1 hour ago