போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சிவில் நீதிபதிகள் பணி மூப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் நீதிபதிகளுக்கு பணி மூப்பு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை சிவில் நீதிபதிகள் பணிக்கு 2009ஆம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு, நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டன. இத்தேர்வில் வெற்றி பெற்று நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள், பணி மூப்பு நிர்ணயித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, பணி மூப்புக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த சுழற்சி நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம், தகுதியான இட ஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவர் என்பதால், போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி மூப்பை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், 2009ஆம் ஆண்டுக்குப் பின் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளநிலை சிவில் நீதிபதிகள் பணி மூப்பை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய பணி மூப்பு அடிப்படையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும், எதிர்வரும் காலங்களில் திருத்தியமைக்கப்பட்ட பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ஒருவேளை இரு விண்ணப்பதாரர்கள், ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE