கொங்கு நாடு பிரிவினை முழக்கம்; சங் பரிவாரத்தின் சுயநல அரசியல்: மார்க்சிஸ்ட் விமர்சனம்

By செய்திப்பிரிவு

நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி, சொந்த சுயநல அரசியல் நோக்கம் மட்டுமே கொண்டு கொங்கு நாடு கோரிக்கை வைத்து இயங்கும் சங் பரிவாரத்தின் நோக்கத்தை உணர்ந்து தமிழக மக்கள் இந்த முழக்கத்தை முற்றிலும் புறந்தள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கேபாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாட்டைச் சார்ந்த எல்.முருகன், மத்திய அரசின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அவர் 'கொங்கு நாட்டை' சேர்ந்தவர் என்று அரசுக் குறிப்பில் இடம்பெற்றிருந்தது. அடுத்த சில நாட்களில், தமிழகத்தைத் துண்டாடி கொங்கு நாடு 'யூனியன் பிரதேசம்' உருவாக்கப்பட இருப்பதாக தினசரி செய்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

தமிழகத்தில் உள்ள பாஜகவினர் பலரும் மேற்கு மாவட்டங்களைத் தனியாக்கி 'கொங்கு நாடாக' அறிவிக்க வேண்டும் எனப் பேசிவருகின்றனர். இது தொடர்பாக கோவை மாவட்ட பாஜக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் தெரிகிறது.

கரோனா பெருந்தொற்றுப் பரவலை எதிர்த்து நாடே கடுமையாகப் போராடி வருகிறது. ஆனால், தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கோளாறு, மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு செய்யவில்லை என்பதுடன் ஜி.எஸ்.டி வரியில் உரிய பங்கினை தருவதிலும், ஜி.எஸ்.டி ஈட்டுத்தொகை வழங்குவதிலும் இழுத்தடிப்பைச் செய்துவருகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விலை உயர்வு ஆகிவற்றின் காரணமாக மக்கள் மருத்துவத்திற்குச் செய்யும் செலவைக் குறைத்துக் கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றன. அடக்குமுறைச் சட்டங்களை பயப்படுத்தி கைது செய்யப்பட்ட ஸ்டான் சாமி, காவலில் மரணமடைந்தார். இது 'நிறுவனப் படுகொலை' என்று ஊடகங்கள் வெளிப்படையாகவே விமர்சித்து எழுதின.

இப்படியான மத்திய அரசின் எதேச்சாதிகார, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கோபக் கனலை திசை திருப்பும் நோக்கத்திற்காக, தமிழ்நாட்டைத் துண்டாடும் பிரச்சாரத்தை சங் பரிவாரம் கையில் எடுத்துள்ளது.

மேலும், மொழி வழியாக மாநிலங்கள் அமைவது, மக்களின் உரிமைக் குரல்களை வலிமைப்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் அதனை விரும்புவதில்லை. சிறுசிறு ஆட்சிப் பகுதிகளாக அவற்றை உடைத்து பலவீனமாக்கி அதன் வழியாகப் பல மொழி பேசும் சிறு பிரதேசங்கள், வலுவான ஒற்றை ஆட்சி என்பதுதான் பாஜகவை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தக் கோட்பாடு ஆகும். இந்த நோக்கத்தில்தான், இந்தியாவின் பல மாநிலங்களை அவர்கள் துண்டாடியுள்ளனர். இதனால் அரசியல் பலனையும் அடைந்துள்ளார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் இயல்பான தேர்வாக அமைந்தது மொழிவாரி மாநிலங்கள். விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் செய்யாத, சங் பரிவாரத்திற்கு இதுகுறித்த அக்கறையோ, மக்கள் நலன் குறித்த பொறுப்புணர்வோ கொஞ்சமும் இல்லை. அதிகாரத்தைக் குவித்துக் கொள்வதில் உள்ள வேட்கையே இத்தகைய துண்டாட்ட நிகழ்ச்சி நிரலின் ஒற்றைக் காரணியாக உள்ளது.

கரோனா பெருந்தொற்றினால் மக்கள் மடிந்துகொண்டிருக்கும் சூழலிலும், அதிலிருந்து மீள தேவையான அக்கறையை காட்டாத சங் பரிவாரத்தினர், திசை திருப்பல் நோக்கில் மக்களைத் துண்டாட முன்னெடுக்கும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி, சொந்த சுயநல அரசியல் நோக்கம் மட்டுமே கொண்டு இயங்கும் சங் பரிவாரத்தின் நோக்கத்தை உணர்ந்து தமிழக மக்கள் இந்த முழக்கத்தை முற்றிலும் புறந்தள்ள வேண்டுமென்று தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 secs ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்