சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல்

By செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று (மே 13) காலமானார்.

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் செந்தமிழன் காலமானார். அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

சீமானின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த செந்தமிழனின் மறைவால் வாடும் சீமானுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE