அமீரக திமுக சார்பில் துபாயில் திமுக வெற்றி விழா, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு விழா கொண்டாட்டம், இப்தார் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட துபாய் தொழிலதிபர்கள் குழுத் தலைவர், சிறந்த மருத்துவமனைகள் உள்ள மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தி, இந்திய அரபுகளுக்கான உறவுப் பாலமாக தமிழகத்தை மாற்ற முதல்வருக்குக் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் திமுக கிளை உள்ளது போன்று அமீரக நாடுகளில் திமுக கிளை வலுவாக உள்ளது. இது தவிர துபாய் வாழ் தமிழர்கள் பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கிளை அமைத்து அமீரகத் தமிழர்கள் ஓர் அமைப்பாக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் உள்ளது போன்று தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பத்தாண்டுகளுக்கும் மேலாக இக்கோரிக்கை நிறைவேறாத நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் இதற்குப் பொறுப்பாக உள்ளார்.
தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்தும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதைக் கொண்டாடும் வகையில் திமுகவின் வெற்றி விழா , பதவியேற்பு விழா, இப்தார் நிகழ்ச்சி துபாயில் கொண்டாடப்பட்டது.
அமீரக திமுக சார்பில் வெற்றி விழா கொண்டாட்டம், இப்தார் நிகழ்ச்சி ரிக்கா பகுதியில் உள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் சமீபத்தில் கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமீரக திமுக துணை அமைப்பாளர் பிளாக் துளிப் வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக துபாய் தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் (Board of Director Dubai Chamber of commerce and Industries and Chairman , Government of Dubai - Awqaf Endowment funds) கலந்துகொண்டார்.
தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியைச் சாத்தியமாக்கி தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் ஸ்டாலினுக்கும், திமுக அமைச்சரவைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார் அவர், “வருடத்திற்கு இரண்டு மூன்று முறை சென்னை வந்து செல்கிறேன். மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்க வேண்டும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பலரும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து செல்வதால் அவர்களும் பலனடையும் வகையில் சிறந்த மருத்துவமனைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி, இந்திய அரபுகளுக்கான உறவுப் பாலமாக திமுக ஆட்சி அமைய வேண்டும்” எனக் கேட்டுகொண்டார்.
அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ் மீரான், “ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த மகத்தான வெற்றியைப் பெற்று, தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு, உழைப்பு என்பதற்கு அடையாளமாகத் திகழும் தமிழக முதல்வருக்குப் பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமீரக மு.லீக் தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, DTS ஜெயந்தி மாலா, பவர் குரூப் MD, ஜாஹிர் ஹுசேன், Allied Motors காமால் , ஆட்டோ விஷன் பைரோஸ், கல்ஃப் நியூஸ் சதீஷ், துபாய் லேடிஸ் அசோசியேஷன் தலைவர், மீனாகுமாரி பத்மநாபன், ஜெஸிலா ரியாஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் அமீரக திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி, இயூமுலீக், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அமீரக திமுக செயலாளர் முஸ்தஃபா நன்றியுரைடன் விழா முடிந்தது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
3 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
16 mins ago
உலகம்
18 mins ago
தமிழகம்
45 mins ago
சினிமா
33 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
53 mins ago
வாழ்வியல்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
வணிகம்
7 hours ago
இந்தியா
1 hour ago