கரோனா பெருந்தொற்று காலத்தில் இலங்கைக்கு பொருட்கள் கடத்தல் அதிகரிப்பு: தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.18 லட்சம் மதிப்பிலான 25 கிலோ வெள்ளி கொலுசுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கரோனா அச்சத்தை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடத்தல் அதிகரிப்பு:

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, விரளி மஞ்சள், பீடி இலை, ஏலக்காய், மஞ்சள் தூள், மல்லி விதைகள், வெங்காய விதைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. மஞ்சள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் இலங்கையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன.

இதனை தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுங்கத் துறையினர், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், உள்ளூர் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கரோனா அச்சம்:

தற்போது கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த கடத்தல் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் கடத்தல்காரர்களை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தாலும் அவர்களை கைது செய்து தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்வதில்லை. கடத்தல் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்து அழித்துவிட்டு, கடத்தல்காரர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் தூத்துக்குடியில் இருந்து பல்வேறு பொருட்களை கடத்தி சென்று இலங்கை கடற்படையினரால் பிடிபட்ட சுமார் 25 பேர் கைது செய்யப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 1,620 கிலோ விரளி மஞ்சளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நாட்டுப்படகு மற்றும் ஒரு சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்:

கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸார் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் ஆகியோர் தலைமையில் இன்று அதிகாலை கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் நின்ற ஒரு நாட்டுப்படகை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

அந்தப் படகில் ஒரு மூட்டையில் வெள்ளிக் கொலுசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 25 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள் அதில் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இதனை இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்த பட்டு என்ற பட்டுராஜன் (38) என்பரை கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தலில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்