கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகள் காரணமாக, சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டாததால், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள மண்டிகளில் காய்கறிகள் தேங்கிக் கிடக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாரத்தில் விளையும் கத்திரி, வெண்டை, முருங்கை, வாழைக்காய், தேங்காய், கீரை வகைகள் போன்ற காய்கறிகள் விவசாயிகளிடம் இருந்து கீரமங்கலம், வடகாடு, புளிச்சங் காடு கைகாட்டி, கொத்தமங்கலம், மறமடக்கி போன்ற இடங்களில் உள்ள தனியார் மண்டிகளில் கொள்முதல் செய்யப்படும். பின்னர், இந்தக் காய்கறிகளை மண்டிகளில் இருந்து வியா பாரத்துக்காக சில்லறை வியா பாரிகள் வாங்கிச் செல்வர். இந் நிலையில், கரோனா 2-வது அலை பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், சில்லறை வியா பாரிகள் காய்கறிகளை வாங்க மண்டிகளுக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் மண்டிகளில் காய்கறிகள் தேங்கி உள்ளன.
இதுகுறித்து கீரமங்கலம் காய்கறி மண்டி உரிமையாளர்கள் கூறியது: காய்கறிகளை வாங்கிச் சென்று குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்றாக வேண்டும். கரோனா பரவல் தீவிரத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வரும் நிலையில், காய்கறிகளை வாங்குவதற்கு சில்லறை வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், காய்கறி களின் விலை குறைந்திருப்பதுடன், மண்டிகளில் காய்கறிகள் தேங்கியுள்ளன என்றனர்.