கரோனா பரவல்; தேர்தல் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு - அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாகத் தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும்படி அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவர அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாகச் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும்போது, கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். மாறாக, அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பிரச்சாரம் செய்யலாம்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது சம்பந்தமாக கடந்த 2ஆம் தேதி, தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்து வருவது, இரண்டாவது அலையாக இருக்கலாம் எனக் கவலை தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள், ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் தலையிட முடியாது என, பிரச்சாரங்களுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

அதேசமயம், பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முகல் கவசம் அணிவதையும், தனிமனித விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக, அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE