புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் பிளவு; பாமக தனித்துப் போட்டி: 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

By செ.ஞானபிரகாஷ்

தொகுதி ஒதுக்கீடு செய்யாததால் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பாமக 15 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில், முதலில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளைப் பிரிப்பதில் பாஜக, அதிமுகவுக்கு இடையே இழுபறி ஏற்பட்டது. அப்போது, பாமக தரப்பில் மாநில அமைப்பாளர் தன்ராஜ், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவைச் சந்தித்து, தங்களுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கக் கோரினார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும் பாமக தரப்பில் சந்தித்துப் பேசினார். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாமகவை பாஜக இணைக்கவில்லை. இறுதியில் ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் இன்று (மார்ச் 17) கூறுகையில், "புதுச்சேரி, காரைக்காலில் பாமக தனித்து 15 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, இன்று 9 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

வேட்பாளர்கள் விவரம்:

மண்ணாடிப்பட்டு - வெங்கடேசன், அரியாங்குப்பம் - சிவராமன், மங்கலம் - மதியழகன், தட்டாஞ்சாவடி - கதிர்வேல், லாஸ்பேட்டை - நரசிம்மன், மணவெளி - கணபதி, இந்திராநகர் - வடிவேல், ஊசுடு - கலியபெருமாள், திருபுவனை - சாண்டில்யன்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் கூட்டணிக் கட்சியான பாமக தனித்துப் போட்டியிடுவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE