புதுச்சேரி தேர்தல்; 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இச்சூழலில், காங்கிரஸுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இரு இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட், விசிக தலா ஒரு இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதில், சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படாததால், அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாக த் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று (மார்ச் 13) அறிவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, உருளையன்பேட்டை தொகுதியில் எஸ்.கோபால், உப்பளம் தொகுதியில் வி.அனிபால்கென்னடி, மங்கலம் தொகுதியில் சண்குமரவேல், முதலியார்பேட்டை தொகுதியில் எல்.சம்பத், வில்லியனூர் தொகுதியில் ஆர்.சிவா, நெல்லித்தோப்பு தொகுதியில் வி.கார்த்திகேயன், ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி.சிவக்குமார், மாண்ணாடிப்பட்டு தொகுதியில் ஏ.கிருஷ்ணன் என்கிற ஏ.கே.குமார், காலாப்பட்டு தொகுதியில் எஸ்.முத்துவேல், திருப்புவனை (தனி) தொகுதியில் ஏ.முகிலன், காரைக்கால் (தெற்கு) தொகுதியில் ஏ.எம்.ஹெச்.நாஜிம், நிரவி திருப்பட்டினம் தொகுதியில் எம்.நாகதியாகராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE