மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க வேண்டும் என தருவைகுளம், வெள்ளப்பட்டியை சேர்ந்த மீனவர்கள் கனிமொழிஎம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
குளத்தூர் அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த மார்ட்டின் மகன்கெமில்டன்(35). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 12-ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் சவேரியார்புரத்தை சேர்ந்த ஜான் (25), பாரத் (22), ராஜா (40), தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டியை சேர்ந்தராபின் (30), அபிஷேக் (19), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த ராஜ் (45), வசந்த் (35), வினித்(22) ஆகிய 8 பேர் மாலத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்துவந்த மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டிமீன் பிடித்ததாக 8 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி தருவைக்குளம், வெள்ளப்பட்டி மீனவர்கள் கனிமொழி எம்பியிடம் வாட்ஸ் அப் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர் சங்கத்தலைவர் அந்தோணி பன்னீர்தாஸ் கூறும்போது, ‘ மீன் பிடிக்கச் சென்ற8 பேரும் 27-ம் தேதி கரை திரும்பவேண்டிய நிலையில் எந்த தகவலும் அவர்களிடமிருந்து வரவில்லை. இதற்கிடையே, மாலத்தீவில் உள்ளதூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மூலமாக படகு அங்கிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனிமொழி எம்பி மற்றும் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோரிடம் தருவைக்குளம் மீனவர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்’’ என்றார்.