சமையல் எரிவாயு விலை ஏற்றம்; மக்களைக் கசக்கிப் பிழியும் மத்திய அரசு: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. சில்லறை விற்பனையில் மத்திய அரசு 61% வரி விதிக்கிறது. மாநில அரசு 56% வரியைத் தன் பங்காக விதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அவற்றின் சில்லறை விற்பனை விலையைக் குறைக்க முடியும் என வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா தொற்று காரணமாக முடங்கிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறது.

பிப்ரவரி 4-ம் தேதிதான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 25 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரண்டாவது முறையாக ரூ.50 உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.785 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைப் போன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றன.

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15 வரை மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 125 அதிகரித்துள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. மக்களைக் கசக்கிப் பிழிந்து வரும் மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கிவிட்டது.

டீசல் விலை ரூ.85 ஆக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எண்ணெய் உற்பத்தி நாடுகளில் கரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததுதான் காரணம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருக்கின்றார்.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்குக் காரணம் சில்லறை விற்பனையில் மத்திய அரசு 61 விழுக்காடு வரி விதிக்கிறது. மாநில அரசு 56 விழுக்காடு வரியைத் தன் பங்காக விதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அவற்றின் சில்லறை விற்பனை விலையைக் குறைக்க முடியும். ஆனால், மக்கள் விரோத மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசும் மக்கள் மீது சுமையை ஏற்றுவதில் போட்டி போடுகின்றன.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்வதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்”.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்