இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நலனுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகளை பிரதிபலிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்து உள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றுள்ளார்.
அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அங்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்துஇருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘நாங்கள் இலங்கையில் அமைதி, நல்வாழ்வை ஊக்குவிக்கிறோம். இலங்கையின் ஒற்றுமை,நிலைத்தன்மை, மாகாணங்களின் ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவலுவான ஒத்துழைப்பை எப்போதும் அளித்து வருகிறது.
இலங்கையில் இன நல்லிணக்கத்தை பேணும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டம் போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஒருங்கிணைந்த இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, சுயமரியாதை போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இலங்கையின் சொந்த ஆர்வத்தில்மேற்கொள்ளப்பட வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசமைப்பின் 13-ம் சட்டத்திருத்தம் உட்பட, இலங்கை அரசால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் சமஅளவில் இதுபொருந்தும். இதன் விளைவாக இலங்கையின் முன்னேற்றமும், வளமும் நிச்சயம் மேம்படும்’ என்றார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பேச்சு குறித்து, ‘இலங்கையில் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகள்மீது மத்திய அரசின் அக்கறையைகுறிக்கும் முக்கியமான ஒன்றாகும்’என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்அவர் கூறும்போது, ‘இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் 13-வதுசட்டத்திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை தமிழக மக்கள் வரவேற்பது உறுதி.
வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கரின் இந்த அறிக்கை,பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் அயராத முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இத்தகவல்களை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.