வண்டகப்பாடி கிராமத்தில் சேறும் சகதியுமாக மாறிய நடைபாதையில் பாலைத் தோளில் சுமந்து செல்லும் மலைவாசிகள். 
தமிழகம்

கல்வராயன்மலையில் சேறும் சகதியுமாக மாறி நடைபாதை சேதம்: கிராம மக்கள் அவதி

ந.முருகவேல்

கனமழை காரணமாக கல்வராயன் மலையில் நடைபாதை மிகவும் சேதமடைந்ததால் மலைக்கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாய் கிராமங்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு சாலை வசதிகள் உள்ளன. குக்கிராமங்களுக்குச் சாலை வசதி இல்லாததால் அவர்கள் பாதை அமைத்து அதைப் பயன்படுத்தி வந்தனர். கல்வராயன்மலை வட்டத்திற்குட்பட்ட தொரடிப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த வண்டகபாடி நடைபாதை, கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக மாறி முற்றிலும் சேதமடைந்தது.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழலில், கால்நடைகளில் பெறப்படும் பாலை, பால் சேகரிக்கும் நிலையத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி, காவடி போல் பால் கேன்களைத் தோளில் சுமந்து 3 கி.மீ. தூரம் நடந்து சென்று விற்பனை செய்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ரேஷன் பொருட்களையும் மூட்டை கட்டித் தலையில் தூக்கி வருகின்றனர். இதுகுறித்து, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பகுதியைப் பார்வையிட்டு சாலை வசதி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர், மலைக்கிராம மக்கள்.

SCROLL FOR NEXT