கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல்: நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்

By க.ரமேஷ்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குத் தொடங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சந்திரசேகர் சாகமூரி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் chandar sekhar sakhamuri IAS என்ற பெயரில் முகநூல் கணக்குத் தொடங்கப்பட்டு executivecdirector50@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இ-மெயில் முகவரி மாவட்ட ஆட்சியர் பெயரில் இருப்பதால் மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகள், பொதுமக்கள், பல்வேறு சமூக நல அமைப்பினர், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதனைப் பார்வையிட்டு தங்களின் கருத்துகளை விருப்பத்துடன் அதிக அளவில் பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று (டிச.16) கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் புகார் செய்துள்ளார்.

அதில், "மாவட்ட ஆட்சியரின் பெயரில் executivecdirector50@gmail.com என்ற என்ற மின்னஞ்சலின் இணைய தள முகவரியில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல், நிர்வாகத்துக்குத் தொடர்பில்லாத இணையதளச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த மின்னஞ்சல் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு, இம்மாதிரியான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடலூர் புதுநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், collrcud@nic.in, cudcollector@gmail.com ஆகிய மின்னஞ்சல்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE