புதுச்சேரியில் இன்று புதிதாக 491 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 544 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 521 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 30) கூறும்போது, "புதுச்சேரியில் 4,938 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 382 பேர், காரைக்காலில் 76 பேர், ஏனாமில் 23 பேர், மாஹேவில் 10 பேர் என மொத்தம் 491 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 3 பேர், காரைக்காலில் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.89 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 27 ஆயிரத்து 544 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,532 பேர், காரைக்காலில் 474 பேர், ஏனாமில் 88 பேர், மாஹேவில் 40 பேர் என 3,134 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் 1,497 பேர், காரைக்காலில் 155 பேர், ஏனாமில் 103 பேர், மாஹேவில் 60 பேர் என 1,815 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,949 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 348 பேர், காரைக்காலில் 81 பேர், ஏனாமில் 29 பேர் என மொத்தம் 458 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 74 (80.14 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 810 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 736 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.