ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களும், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.
பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் சிறப்பு பிரதிநிதியாக பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல முன்னணி திமுக தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். ஸ்டாலின் மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்.
தமிழக அரசு, பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்து ரூ.110 கோடி அளவுக்கு பணத்தை மீட்பதில் அக்கறை காட்டிவருகிறது. இதுமட்டும் போதாது, முறைகேடு செய்தவர்கள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப் பின்பற்றி தமிழக அரசு அரசியல் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுகதான் எங்கள் அரசியல் மற்றும் சித்தாந்த எதிரி. இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத, பிரிவினைவாதத்தை தூண்டுகிற, ஒரு மொழியை, ஒரு தரப்பினரை எதிர்க்கிற விகாரமான கட்சி அது.
அதிமுகவின் முக்கிய எதிரியும் திமுக என்பதால் நாங்கள் இருவரும் நண்பர்களாக உள்ளோம். பல விஷயங்களில் எங்களோடு ஒத்துப்போவதால் அதிமுகவுடன் நண்பர்களாக உள்ளோம் என்றார்.