விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு முடிந்த நான்காம் நாளில் அங்குள்ள ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெறும். இதில், ஒட்டங்காடு, வெட்டி நத்தமேடு, செம்மாறு, ஏனாதி மங்கலம், மாம்பழப்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒன்று கூடி மீன் பிடித்துச் செல்வதுண்டு.
ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒன்று கூடி இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையே கல்பட்டு ஏரியில் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. காலை முதலே கிராம மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் குவிய, மீன் பிடித் திருவிழா களை கட்டியது.
சமூக இடைவெளியின்றி கிராம மக்கள் ஒன்று கூடி மீன் பிடிப்பதாக தகவல் வர, காணை காவல்நிலைய போலீஸார் அங்கு சென்று மீன் பிடித்த கிராம மக்களை எச்சரித்து, விரட்டியத்தனர். மேலும், மீன்பிடி விழாவிற்கு வந்தவர்களின் இருசக்கர வாகனங்களில் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். மீன் பிடிக்க வந்தவர்கள் அதுவரையில் பிடித்த மீன்களுடன், இருசக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டே தங்கள் கிராமங்களுக்குச் சென்றனர். ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு முடிந்த நான்காம் நாளில் அங்குள்ள ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெறும்.