சாத்தான்குளம் வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணையை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 8 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

சிபிசிஐடி தரப்பில் அரசு வழக்கறிஞர் சுப்புராஜ், மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லோகேஸ்வரன், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE