தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த முதியவர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த 39 வயது இளைஞர் இன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சொந்த ஊராக கொண்ட 72 வயது முதியவர், திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 11-ம் தேதி கோவில்பட்டிக்கு தனியாக வந்த இவர், அங்குள்ள பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடல் நிலை மோசமாக இருந்ததால் அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இறந்தார். இதையடுத்து அவரது உடல் தூத்துக்குடி சிதம்பரநகர் மையவாடியில் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஒரு மூதாட்டி மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். மற்ற மூவரும் ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
கப்பல் மாலுமிக்கு கரோனா:
இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி ஏற்றி தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 35 வயது மாலுமிக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த கப்பலில் பணியாற்றும் 18 மாலுமிகள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கப்பல் துறைமுக பகுதியிலேயே தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் ஒருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வசித்த தூத்துக்குடி அண்ணாநகர் 9-வது தெரு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.