நடுக்கடலில் படகு விபத்து: மாயமான 4 ராமேசுவரம் மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்பு

ராமேசுவரம் அருகே பாக் ஜலசந்தி கடற்பகுதியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு படகு விபத்துக்குள்ளான நிலையில், அதில் சிக்கிய 4 விசைப்படகு மீனவர்களில் ஒரு மீனவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீன்பிடித்தடைக்காலம் முடிந்த பிறகு கடந்த சனிக்கிழமை ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் படகில் சென்ற மலர் வண்ணன் (55), ரெஜின்பாஸ்கர் (43), ஆனந்த் (எ) சுஜிந்திரா 18, ஜேசு (60) ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும் கரை திரும்பாததால் திங்கட்கிழமை மாயமான மீனவர்களை இந்திய கடலோர காவல்படை மற்றும் மெரைன் போலீஸ் ஆகியோருக்கும் புகார் அறிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலோர காவல்படையினரின் ஹோவர் கிராஃப் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் நேற்று தொடர் தேடும் பணி நடைபெற்றது.

செவ்வாய்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது நடுக்கடலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விசைப்படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை கோட்டைபட்டிணம் மீனவர்கள் சிகிச்சைக்காக மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் 3 மீனவர்கள் மீட்கப்படாததால் ராமேசுவரத்தில் உறவினர்கள் பதட்டம் அடைந்தனர். மீனவர்களை மீட்கக்கோரி ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்கிழமை மதியம் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து வட்டாச்சியர் அப்துல் ஜப்பார் நடத்திய பேச்சுவார்த்தையில் அடிப்படையில் மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

மேலும் செவ்வாய்கிழமை இரண்டாவது நாளாக இந்திய கடலோர காவல் படையின் ஹோவர் கிராஃப் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்றது.

எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE