சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைப்பதில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக, வேறு மத மயான பூமியில் புதைக்கப்பட்டது. அவரது உடலைத் தோண்டி எடுத்து தங்கள் மதம் சார்ந்த கல்லறையில் புதைக்க அனுமதி கேட்டு மருத்துவரின் மனைவி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் பாதுகாப்பைக் காரணம் காட்டி அக்கோரிக்கையை சென்னை மாநகராட்சி மறுத்துள்ளது.
சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பிரபல மருத்துவர் சைமன், கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்க எடுத்துச் செல்லும்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அவரது உடல் மாநகராட்சி மயான பூமியில் புதைக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்தியா முழுதுவம் பேசுபொருளானது.
தனது கணவரி கடைசி ஆசைப்படி அவரது உடலைத் தோண்டி தங்கள் மதம் சார்ந்த கல்லறையில் அடக்கம் செய்ய உதவும்படி முதல்வரிடம் மருத்துவரின் மனைவி ஆனந்தி சைமன் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை சென்னை மாநகராட்சி நிராகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:
“மருத்துவர் சைமன் ஹெர்குலில்ஸ் என்பவர் நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சைக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்.19 அன்று இயற்கை எய்தினார்.
அன்று மாலை 6 மணி அளவில் அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மரணமடைந்த மருத்துவரை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவரது மனைவியிடம் தெரிவித்தபோது அவர் குடும்பத்திற்கு என்று கீழ்ப்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு என்கிற தனியார் இடத்தில் அடக்கம் செய்ய இடம் உள்ளதாகவும், அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சென்னை மாநகராட்சி சார்பில் சிமெட்ரி போர்டு நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் குடும்பத்தார் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. சிமெட்ரி நிர்வாகத்தினர் மருத்துவர் உடலை 19/4 இரவு குடும்பத்திற்கு அடக்கம் செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்தனர். இத்தகவல் உடனடியாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் சைமனின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மருத்துவர் குடும்பத்தினர் அன்று இரவுக்குள் மருத்துவர் உடலை வேறு ஏதேனும் கல்லறையில் நல்லடக்கம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி கீழ்ப்பாக்கம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் கிறித்தவக் கல்லறையில் அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
மருத்துவர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் ஏப்.19 இரவு 10 மணி அளவில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் அடக்கம் தொடர்பான தகவல்கள் கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு இரவு 8 மணிக்குத் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது.
அதன்படி கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான குழுவினரால் பாதுகாப்பு அவ்விடத்தில் வழங்கப்பட்டது. மரணமடைந்த உடலை நல்லடக்கம் செய்யத் தேவையான பணிகள் தொடங்கிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுசேர்ந்து கரோனா நோய்த் தோற்று பாதித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களிடம் அண்ணா நகர் காவல் துணை ஆணையரும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையரும் மருத்துவர் உடலை அடக்கம் செய்வதால் மருத்துவரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என எடுத்துக் கூறியும் பொதுமக்கள் ஏற்கவில்லை. மேற்கண்ட சூழ்நிலை காரணமாக மருத்துவர் உடலை அவரது குடும்பத்தார் சம்மதத்துடன் 101-வது வார்டில் அமைந்துள்ள வேலங்காடு மயான பூமியில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அண்ணா நகர் காவல் உதவி ஆணையருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மரணம் அடைந்தவரின் உடல் வேலங்காடு மயான பூமிக்குக் கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து உடல் அடக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு வந்த அவரது குடும்பத்தார் மதம் சார்ந்த சடங்குகளைச் செய்து முடித்தனர்.
எதிர்பாராதவிதமாக மயான பூமிக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தாக்கினர். ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இந்த அசாதாரண சூழ்நிலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவர் உடல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
காவல் துறையினரால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் இறந்தவரின் உடல் வேலங்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யத் திரும்பக் கொண்டு வரப்பட்டது .
மரணமடைந்த மருத்துவரின் சக மருத்துவர் பிரதீப் முன்னிலையில் மரணமடைந்தவரின் உடல் முழு மரியாதையுடன், மதச் சடங்குகளின் படியும், நோய்த் தொற்று பாதிப்பு மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கான சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படியும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மருத்துவரின் மனைவி ஆனந்தி சைமன் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொள்ளப் கீழ்ப்பாக்கம் சிமெட்ரி போர்டு கல்லறையில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியிடம் கடந்த 22-ம் தேதி வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டது.
அவர்கள் அறிக்கையின்படி கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட பின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளதால் ஆனந்தி சைமனின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
27 mins ago
க்ரைம்
21 mins ago
தமிழகம்
12 mins ago
சினிமா
36 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago