டெங்கு காய்ச்சல் பாதிப்பு: அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரசு மருத்துவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மலைப் பகுதியில் இருக்கும் குக்கிராமத்துக்கு பரிசல் மூலம் சென்று பணியாற்றிய இளம் அரசு மருத்துவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை ரேயான் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வி.ஜெயமோகன் (30). பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற ஜெயமோகன், மருத்துவம் படித்தார். மலைப் பகுதியில் இருக்கும் குக்கிராமத்தில், பரிசல் மூலமே கடந்து சென்று அரசு மருத்துவராக அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தார்.

தற்போது நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதற்கிடையில், மகன் இறந்த துக்கம் தாளாமல் ஜெயமோகனின் தாய் ஜோதி (52), விஷமருந்திவிட்டார். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE