ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததை வெளியில் சொன்னாலோ, பேட்டி அளித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்குவார், அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்களுடன் திடீரென ரஜினி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்கள் சந்திப்புக்குப் பின் கட்சி அறிவிப்பு வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல விஷயங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளன. ரஜினி ஏமாற்றமடைந்தேன் என பேட்டி அளிக்கும் அளவுக்கு சில மாவட்டச் செயலாளர்கள் ரஜினியிடமே நேரடியாக சில விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவையனைத்தையும் ரஜினி பொறுமையாகக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கூட்டத்தில் பேசப்பட்ட எதையும் யாரும் வெளியே சொல்லக்கூடாது. பேட்டி அளிக்கக்கூடாது எனக் கட்டளையிட்ட ரஜினி, மீறி நடந்தால் நடவடிக்கை வரும் என்று எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.